Wednesday, January 6, 2010

!அந்நாள் திரும்புமோ? !

"ஹயோ ! சூப்பர் காத்து..!",
இது நீ சொல்ல நான் கேட்ட முதல் வார்த்தை.
நான் குரல் வந்த திசை திரும்ப ..
அங்கே வெள்ளையில் சிகப்பு பூ போட்ட சுடிதாரில்..
ஒரு "தேவதை","நீ" ..நின்றாய்.
எனக்குள்ளே "சிம்போனி இசை" கேட்க
சைடில்..பல்பும் கூட எரிந்தது..
"இது காதல் தான் ",என்று என்னுள் கூறிக்கொண்டு ..
நீ ரசித்த அம்மாலை நேரத் தென்றலுக்கு நன்றி கூறிய
அந்நாள் திரும்புமோ ?


"ஐயோ ! பாத்து பாத்து "
"அதே குரல்", என்று என்னுள் அலாரம் அடிக்க..
குரல் வந்த திசை நோக்கினேன் ..
"அதே முகம்" ஆனால் பச்சை நிற சுடிதாரில் இன்று..
என்னை நோக்கி கை நீட்டியபடி நின்றாய் ..
"இது காதலே தான்", என்று என்னுள் கூறிக்கொண்டு..
"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா ?",என்று கேட்ட வண்டிக்காரனுக்கு
சிரித்தபடி கை காட்டி,உன்னோடு நான் பேச துவங்கிய
அந்நாள் திரும்புமோ?

பல நாள் தவங்கட்கு பின் ..
ஒரு நாள் உன் மொபைல் எண்ணை..
ஒரு தாளில் எழுதி என் கையில் திணித்து
திரும்பிப்பார்க்காமல் சென்றாய்..
சந்தோஷத்தில் வரம் தந்த உனக்கு அர்ச்சனை செய்து..
எங்கள் தெரு ரெட்டை பிள்ளையாருக்கு விடலை போட்டு..
நன்றி கூறிய
அந்நாள் திரும்புமோ?

பல போராட்டங்கள் பின் தள்ளி..
உன் கைகளை நான் எட்டி பிடித்து..
நாம் வாழ்வில் ஒருவராய் இணைந்த அன்று..
"என்னுடன் உள்ள வடுக்கள்..."
உன்னை அடைய நான் கடந்த போராட்டங்களின் எச்சங்களாக..
இருப்பதை ..உன்னிடம் காட்டியபோது..
உன் முத்துக்கண்ணீரை மருந்தாக நீ இட்டாய்..
வடுக்கள் மறையும் என்ற நம்பிக்கையில்..
அந்நாள் திரும்புமோ ?


ஒரு நாள் கோயிலுக்கு நாம் போய்
திரும்பிய போது..
தெருக்கடையில் 5 ரூபாய்க்கு நீ மல்லிப்பூ வாங்கி சூடினாய்..
அதைக்கண்டு நான்
"ஒரு மலரே
மலர் சூடுகிறதே
ஆச்சரியக் குறி.!"
என்று ஒரு மொக்கை கவிதை சொல்ல..
அதற்கும் நீ என் தோளில் சாய்ந்து சிரித்தாய்..
அந்நாள் திரும்புமோ ?


மொட்டை மாடியில் படுத்து..நாம்
வானில் சிதறிக்கிடக்கும் விண்மீனை எண்ணிக் கிடக்க,,
"நான் வந்துட்டேன் " என்று நம் செல்வம் வந்து மேல் பாய..
இருவரும் சேர்த்து அனைத்துக் கொண்டோம் ..
அந்நாள் திரும்புமோ ?


திடீரென ஒரு நாள் நீ அழுதாய்..
ஏன் என்று நான் கேட்க..
நீ பதில் சொல்லவில்லை..
நீ அழும் காட்சி கண்டு என் கண்ணில் நீர் கசிந்தது..

கண்ணீரில் குளித்த தலையணை
என்னை எழுப்ப..
"சே..கனவா !", என்று கசிந்த கண்ணீர் துடைத்தேன்..
என்னவள் ஏன் அழுதாள் என்பதற்கு விடை காண..
அடுத்த கனவிற்கு காத்திருக்கிறேன் ..

-நான் தமிழன்

No comments:

Post a Comment